திராவிடக் கட்சிகளை வேரறுப்பது.. இது தான் ராமதாசின் தற்போதைய கொள்கை!
திண்டிவனம்: தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான் பாமகவின் தற்போதைய கொள்கை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி திண்டிவனத்தில் நேற்று இறுதிக் கட்ட பிரசாரத்தில் பேசிய அவர், திராவிடக் கட்சிகள் தான் 44 ஆண்டுகள் நகராட்சியை ஆட்சி செய்துள்ளன. நல்ல திட்டங்கள் ஏதேனும் அவர்கள் செயல்படுத்தியிருந்தால் நானும் அவர்களுக்கே வாக்களிப்பேன். ஆனால் இது வரை அவர்களால் ஏமாற்றமே கிடைத்துள்ளது.
புதிய திண்டிவனம் நகரத்தை பாமக உருவாக்கும் என நான் பல முறை உங்களுக்கு வாக்குறுதி அளித்தும் வாக்காளர்கள் அதைக் கேட்கவில்லை. இப்போது நகரில் நல்ல குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட்டாமல் உள்ளன. மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் இம்முறை பாமக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பாமகவின் தற்போதைய கொள்கை திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான். தமிழ்நாட்டில் 2016ல் பாமக ஆட்சி அமைக்கும்' என்றார்
மறுதேர்தல் நடத்த உத்தரவிடாவிட்டால் வழக்கு:
இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படக்கூடாது என்று அரசியல் கட்சிகளும், நடுநிலையாளர்களும் விரும்பினார்களோ, அதற்கு நேர்எதிரான வகையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் எப்படியாவது வெற்றி பெற்றுவிடவேண்டும் என்று நினைத்த ஆளும் கட்சி, தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை உதவியுடன் அதன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.
சென்னையிலுள்ள 90 சதவீதம் வாக்கு சாவடிகளில் வீடியோ மூலம் வாக்குப்பதிவு படம் பிடிக்கப்படவில்லை.
வெளிமாநில காவலர்கள் மட்டுமின்றி தமிழக காவலர்களும் பாதுகாப்புக்கு நிறுத்தப்படவில்லை. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலிருந்தே அ.தி.மு.கவை சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோர் சென்னையின் எல்லா பகுதிகளிலும் குண்டர்களின் உதவியுடன் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி விருப்பம்போல கள்ளவாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
பொதுமக்கள் வாக்களிக்க வந்தபோது, அவர்களுக்கு பாதுகாப்பு தராத காவல்துறையினர், அ.தி.மு.கவினரின் இந்த சட்டவிரோத செயலுக்கு பாதுகாப்பு அரணாக நின்றிருக்கின்றனர்.
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோரிடம் பலமுறை முறையீடு அளித்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஆணையம் மற்றும் அதிகாரிகளின் இந்தப்போக்கு கண்டிக்கத்தக்கது.
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் இப்படி ஒரு தேர்தலை நடத்தியதற்கு பதில், அ.தி.மு.க. வெற்றி பெற்றதாக ஆரம்பத்திலேயே அறிவித்திருந்திருக்கலாம். சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இத்தகைய முறைகேடுகள் அரங்கேறியிருக்கின்றன.
முறைகேடான தேர்தலை நடத்தியதன் மூலம் ஏற்பட்டுள்ள தீராப் பழியையும், களங்கத்தையும் போக்க, சென்னை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடவேண்டும். அவ்வாறு உத்தரவிடப்படாவிட்டால், இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. சார்பில் வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications