சென்னையிலிருந்து விமானம் மூலம் விரைந்து வந்து பெரியகுளத்தில் ஓட்டுப் போட்ட ஓ.பன்னீர்செல்வம்
பெரியகுளம்: பெரியகுளத்தில் தனது ஓட்டை பதிவு செய்ய விமானம் மூலம் சென்னையில் இருந்து பறந்து வந்தார் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். கொட்டும் மழையில் கடைசி நேரத்தில் வந்து சேர்ந்த அவர் தனது ஓட்டைப் பதிவு செய்தார்.
பெரியகுளம் நகர் மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியான ராஜா போட்டியிடுகின்றார். இவருக்காக கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்தார் பன்னீர்செல்வம். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
அதிமுக 40வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றதால், அந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை சென்றிருந்தார் பன்னீர் செல்வம். இதனால் அவர் ஓட்டுப் போட பெரியகுளம் வருவாரா, இல்லையா என்பதில் குழப்பம் இருந்தது. இருந்தாலும் அம்மா தலைமையில்நடந்த அதிமுக 40வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட கையோடு விமானத்தைப் பிடித்து மதுரை விரைந்தார் பன்னீர்செல்வம்.
பின்னர் அங்கிருந்து பெரியகுளம் விரைந்தார். ஒரு வழியாக வாக்குச் சாவடிக்கு அவர் வந்து சேர்ந்தபோது மணி 4.30. வாக்குப் பதிவு முடிய அரை மணி நேரமே இருந்த நிலையில் வந்து சேர்ந்த பன்னீர்செல்வத்தைப் பார்த்து அதிமுகவினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அப்போது பெய்து கொண்டிருந்த அடை மழையையும் பொருட்படுத்தாமல், குடை புடை சூழ வந்து வாக்களித்தார் பன்னீர் செல்வம்.
இந்த சம்பவம்த்தை சுட்டிக் காட்டி, அண்ணன் எப்ப வருவார் எப்படி வருவார்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு கரெக்டா வந்துடுவார் என அதிமுக-வினர் பன்ச் டயலாக் அடிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications