இலவசங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு துப்பு: பஞ்சாயத்து தலைவர் வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடி: குரும்பூர் அருகே தேர்தல் ஆணையத்திற்கு துப்பு கொடுத்ததற்காக பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் கண்ணனை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ளது வீரமாணிக்கம். அங்கு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் கண்ணன் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில் கண்ணன் தன் வீட்டின் முன் நின்றுக் கொண்டிருந்தபோது கையில் அரிவாளுடன் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த கண்ணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து குரும்பூர் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் விசாரணை நடத்தி கண்ணனை தாக்கியதாக கூறப்படும் வார்டு வேட்பாளர் நந்தகோபால், அவரது மகன் ஆனந்த், ராஜவிநாயகம், ராஜு, சிவா, முத்து, மாடசாமி ஆகிய 7 பேரைத் தேடி வருகிறார்கள்.
பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் கண்ணன் தவிர பட்டு ராமசுந்தரம், அருண், ரமேஷ் உள்பட 5 பேர் போட்டியிடுகிறார்கள். கடந்த வாரம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக நந்தகோபாலுக்கு வந்த வேஷ்டி சேலைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதற்கு வேட்பாளர் கண்ணன் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் நந்தகோபால் அவரது ஆதரவாளர்களுடன் சென்று கண்ணனை தாக்கியதாகத் தெரிகிறது.
அதிமுக வேட்பாளரை தாக்கிய போலீசார்
தூத்துக்குடி மாநகராட்சி 12வது வார்டில் அதி்முக சார்பில் போட்டியிடுபவர் பூபாலராயபுரத்தைச் சேர்ந்த முருகேசன். இவர் நேற்று இரவு தனது வீட்டு முன்பு சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் தேர்தல் சமயத்தில் கூட்டமாக நின்று பேசக் கூடாது என்று கூறி அவர்களை கலைந்து போகுமாறு கூறியுள்னர்.
இதனால் தகராறு ஏற்பட்டது. இதில் முருகேசனை போலீசார் கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த முருகேசன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications