காலையில் பார்த்த தேர்தல் சின்னம் மாலையில் மறைந்த மாயம்- மக்கள் மறியல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே காலையில் வாக்குச் சீட்டில் இடம் பெற்றிருந்த ஒரு சின்னம், மாலையில் காணாமல் போனதால் மக்கள் சாலை மறியலில் குதித்தனர்.
ஜி.அரியூர், 17-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினருக்கு அதிமுக சார்பில் செந்தாமரை, திமுக சார்பில் கல்யாணி, தேமுதிக சார்பில் பச்சையம்மாள், சுயேச்சையாக முருகவேணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த வார்டு ஜி.அரியூர், அம்மன்கொல்லைமேடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. முருகவேணியைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அம்மன்கொல்லைமேட்டைச் சேர்ந்தவர்கள். இதில் ஜி.அரியூர் பெரிய கிராமம் என்பதால், சுயேச்சையாகப் போட்டியிடும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகவேணி பலமான போட்டியாளராக இருந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பிற்பகலுக்கு மேல் முருகவேணியின் பெயர் மற்றும் சின்னம் சீட்டில் என சிலர் வெளியில் வந்து தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விரைந்து சென்றனர். மோசடி நடைபெறுவதாக கூறியும், முருகவேணியை போட்டியின்றி தேர்வு பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சாலை மறியலில் குதித்தனர்.
ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து போராட்டத்தில் குதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தணை கலெக்டர், தாசில்தார், தேர்தல் அலுவலர், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் இறுதியில் வேட்பாளரின் சின்னம் இல்லாமல் பதிவான 41 வாக்குகளை மட்டும் மீண்டும் பதிவு செய்வது எனவும், வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்கனவே பதிவான 41 வாக்குகளை பிரித்து தனியாக எடுப்பது எனவும் தீர்மானமானது.
இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது.












Click it and Unblock the Notifications