ஜெயதேவா To விக்டோரியா.. எதியூரப்பாவின் 'கிரேட் ஹாஸ்பிடல் ட்ரிக்'!

இந் நிலையில் அவருக்கு இதயக் கோளாறு ஏதும் இல்லை என்று மருத்துவமனையும் கூறிவிட்டதால், அவரை பெங்களூர் ஜெயதேவா மருத்துவமனை இன்று டிஸ்சார்ஜ் செய்துவிட்டது.
ஆனால், வேறு சில உடல் நிலை காரணங்களைக் கூறி அவர் இன்னொரு அரசு மருத்துவமனையான விக்டோரியா மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார்.
நில மோசடி விவகாரத்தில் கடந்த சனிக்கிழமை அவரைக் கைது செய்ய லோக் ஆயுக்தா போலீசார் சென்றபோது அவர்களிடமிருந்து எஸ்கேப் ஆனார் எதியூரப்பா. கைது என்ற பெயர் வரக் கூடாது என்பதற்காக நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவரை நீதிமன்றக் காவலில் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், அவர் சிறையில் பெரும்பாலான நேரத்தை அங்குள்ள மருத்துவமனையிலேயே கழித்துவிட்டதாகவும், அவருக்கு ஒதுக்கப்பட்ட சிறை அறைக்குள்ளேயே போகவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாலை 5 மணிக்கு சிறைச்சாலைக்குள் கொண்டு செல்லப்பட்ட அவரை போலீசார் சல்யூட் அடித்து வரவேற்க, நேராக அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அங்கேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்துள்ளார். இதையடுத்து இரவில் நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி, பெங்களூர் ஜெயநகர் அருகே உள்ள ஜெயதேவா இதய மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார்.
இந் நிலையில் எதியூரப்பாவுக்கு ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
சனிக்கிழமை இரவு முதல் இன்று வரை அங்கேயே இருந்த எதியூரப்பாவை பரிசோதிக்க 5 டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய பரிசோதனையில் அவருக்கு இதயக் கோளாறு ஏதும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அவர் மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சிறைச்சாலைக்குத் தான் கொண்டு செல்லப்பட வேண்டும்.
ஆனால், ஜெயதேவா மருத்துவமனையில் இருந்து அவர் ஆம்புலன்சில் கிளம்பினார். முதுகு வலி உள்ளிட்ட பிற உடல் நிலை காரணங்களை சுட்டிக் காட்டி அவர் விக்டோரியா மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார்.
இந் நிலையில் எதியூரப்பாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று உயர் நீதிமன்றம் வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது.
இன்னொரு ஊழல் விவகாரத்திலும் எதியூரப்பா:
இந் நிலையில் பெங்களுரில் இன்னொரு நிலத்தை தனது மகன்களுக்கு ஒதுக்கி அதை ஜேஎஸ்டபிள்யூ சுரங்க நிறுவனத்துக்கு விற்றதில் பல கோடி அளவுக்கு ஊழல் செய்த விவகாரத்தில் எதியூரப்பாவுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதாக நீதிமன்றத்தில் லோக் ஆயுக்தா இன்று தெரிவித்தது.
இந்த வழக்கில் முழு விவரங்களையும் வரும் 29ம் தேதி தாக்கல் செய்யுமாறு லோக் ஆயுக்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications