சென்னை தேர்தல் வாக்குகளை எண்ணலாம், ஆனால் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது- உயர்நீதிமன்றம்

சென்னை மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கவில்லை. வாக்குப் பதிவை வீடியோவில் படம் பிடிக்கவில்லை. மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புக்கு நிறுத்தவில்லை. இதுதொடர்பாக உயர்நீதமன்றம், சம்பந்தப்பட்டவர்கள் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதேபோல பாமக சார்பில் மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, வாக்கு எண்ணிக்கைக்கு இடைக்காலத் தடை கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். திமுக மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியனும் இதேபோல ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் அனைத்தும் இன்று உயர்நீதிமன்ற பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
வாக்குப் பதிவை வீடியோ பிடிக்க வேண்டும் என்ற பிறப்பித்த உத்தரவை தேர்தல் ஆணையம் செயல்படுத்த மறுத்தது ஏன்? ஒரு வேளை வீடியோ பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டிருந்தால், வாக்குப் பதிவை தள்ளி வைத்திருக்க வேண்டாமா. அதை செய்யாதது ஏன்?. உயர்நீதிமன்றம் ஒரு ஆணை பிறப்பித்தும், அதை அமல்படுத்த தேர்தல் ஆணைய் தவறியது கண்டனத்துக்குரியது என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர்.
பின்னர் இதுதொடர்பாக இன்று பிற்பகலுக்குள் தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை இன்று பிற்பகலுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர். அப்போது நீதிபதிகள் கூறுகையில், வாக்கு எண்ணிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கத் தேவையில்லை. இருப்பினும் உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாகும்.
தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை நவம்பர் 9ம் தேதிக்குள் தாக்கல் செய் வேண்டும். அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications