அடித்து ஆடும் லீமா ரோஸ் மார்டின்.. முறிக்க முயற்சி பண்ணலையாம்.. இணைப்பதற்காக பாடுபடுவதாக பேட்டி
சென்னை: தமிழக அரசியலில் கூட்டணி விவகாரம் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பரபரப்பு நீடித்து வரும் நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் மார்டின், "மக்கள் முன்னேற்றத்திற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது; பிளவை ஏற்படுத்த அல்ல" என்று தெரிவித்தார்.
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி அரசியல் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் முன்வைத்து வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தொகுதியின் வளர்ச்சிக்காகவும் தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் என்பது மக்கள் நலனை மையமாகக் கொண்டு இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதற்காக முதல்வர் விஜய்க்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டதும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முக்கிய திட்டமாக உள்ளது. இதையும் நாங்கள் வரவேற்கிறோம். மேலும், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
'உங்களால்தான் அரசியலில் பிளவு ஏற்பட்டுள்ளது' என்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில், நாங்கள் யாரையும் பிரிக்க வரவில்லை. அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில்தான் செயல்பட்டு வருகிறோம்," என்றார்.












Click it and Unblock the Notifications