3 தமிழர் வழக்கு விசாரணை-வாக்களிப்பதைக் கைவிட்டு வைகோ டெல்லி பயணம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊர் கலிங்கப்பட்டி. பொது தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் வைகோ தனது சொந்த ஊரில் ஓட்டு போடுவது வழக்கம். இதற்காக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு நேற்று காலை கலிங்கப்பட்டி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இது குறித்து மதிமுக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. ஆனால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து நீக்கி, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிலரால் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதன் மீது 19.10.2011-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று, நீதிபதி சிங்வி நீதிமன்றம் அறிவித்து இருந்தது. செப்டம்பர் 28ம் தேதி வைகோ டெல்லி சென்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியைச் சந்தித்தார். இந்த வழக்கு குறித்து ஆலோசனையும் மேற்கொண்டார்.
நீதிபதி சிங்வி விடுமுறையில் செல்வதால், இவ்வழக்கு 19ம் தேதி எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும், சில நாட்கள் கழித்து விசாரணைக்கு வரும் என்றும், 17.10.2011 அன்று டெல்லியில் இருந்து தகவல் சொல்லப்பட்டது.
18.10.2011 கலிங்கப்பட்டியில் இருந்த வைகோவுக்கு மாலை 4.30 மணி அளவில், 19.10.2011ம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி டத்தோ, நீதிபதி சந்திரமௌலி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது என்று தகவல் கிடைத்தது.
உடனே, வைகோ தொலைபேசி மூலம் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியிடம் தொடர்புகொண்டு, 19.10.201ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள இந்த வழக்கில் அவசியம் நீங்கள் ஆஜராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை பங்கேற்கச் செய்வதற்காக 18.10.2011ம் தேதி தகவல் கிடைத்த உடனே, கலிங்கப்பட்டியில் இருந்து வைகோ புறப்பட்டு மதுரைக்கு வந்து மும்பை வழியாக விமானம் மூலம் டெல்லிக்குப் பயணமாகின்றார்.
இதுவரை எந்தத் தேர்தலிலும் வைகோ வாக்கு அளிக்காமல் இருந்தது இல்லை. நாளை(இன்று) அவரது சொந்த கிராமத்தில் வாக்களிக்க வேண்டிய ஜனநாயகக் கடமை இருந்தாலும், மூன்று தமிழர் உயிரைக் காக்கும் முயற்சி அதைவிட முக்கியமானது எனக் கருதி வைகோ டெல்லி புறப்பட்டார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications