வனத்துறை அமைச்சர் பச்சைமால் முகத்தில் ஆசிட் அடிப்பதாக மிரட்டல்
நாகர்கோவில்: தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் முகத்தில் ஆசிட் வீசுவோம் என்று கூறி மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் வீடு நாகர்கோவில் தம்மத்துக்கோணத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.
அந்த கடிதத்தில் நாகர்கோவில் அருகே உள்ள கிராம பஞ்சாயத்தில் எனது அண்ணனுக்கு எதிராக உங்களது உதவியுடன் ஒருவர் போட்டியிடுகிறார். அவர் அங்கு வெற்றி பெறப்போவதில்லை. எனது அண்ணன் தான் வெற்றி பெறுவார். உங்களது ஆதரவாளர் தோல்வியடைவது உறுதி.
எனது அண்ணன் தோற்றால் உங்களது முகத்தில் ஆசிட் வீசுவேன் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இலந்தையடித்தட்டு பிரகாஷ் என்ற பெயரில் அந்த கடிதம் எழுதப்பட்டு இருந்தது.
இந்த மிரட்டல் குறித்து அமைச்சர் பச்சைமால் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அவருக்கு ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் பாதுகாப்பு அளித்து வந்தனர். தற்போது மேலும் ஒரு சப்- இன்ஸ்பெக்டர், 2 போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். 6 போலீசாரும் தீவிரமாக கண்காணித்து அமைச்சர் பச்சைமாலுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இதுதவிர அமைச்சர் பச்சைமால் வீட்டிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications