ராதாபுரம் அருகே ஓட்டு சீட்டு மாறிய இடத்தில் விறுவிறு மறுவாக்குப்பதிவு
ராதாபுரம்: வாக்குச் சீட்டு குளறுபடியால் பரமேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு இன்று மறுவாக்குப்பதிவு நடந்தது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பரமேஸ்வரபுரம் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் (17ம் தேதி) நடந்தது. தலைவர் பதவிக்கு கல்யாணி, சந்தோஷ் ஆகிய 2 பேர் போட்டியிட்டனர். ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டு பதிவு தொடங்கியது முதல் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்தது.
இந்நிலையில் 69ஏ டபி்ள்யூ என்ற வாக்குச்சாவடியில் வழங்கப்பட்ட தலைவர் பதவிக்கான வாக்குச் சீட்டுகளில் இரண்டு சின்னங்களுக்கு பதிலாக 5 சின்னங்கள் இருந்தன. வாக்குச் சீட்டுகள் மாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் அந்த வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என்று வேட்பாளர்கள் வலியுறுத்தினர். இது குறித்து நெல்லை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான செல்வராஜ் ஆலோசனை நடத்தி அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடந்த உத்தரவிட்டார். அதன்படி அங்கு இன்று மறுவாக்குப்பதிவு நடந்தது.
வாக்குப்பதிவு துவங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஓட்டு பதிவு தொடங்கிய 1 மணி நேரத்தில் 200 பேர் வாக்களித்தனர். காலை 10 மணிக்குள் மொத்தமுள்ள 372 வாக்காளர்களில் 256 பேர் வாக்களித்துவிட்டனர்.
தேர்தல் தகராறு: வாலிபருக்கு கத்தி குத்து
ஆலங்குளம் அருகே உள்ள காடுவெட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியிடுகிறார்கள். இதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. அப்போது ஒரு தரப்பைச் சேர்ந்த ஜோசப் என்பவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. இதை மற்றொரு தரப்பைச் சேர்ந்த நவராஜ் என்பவர் தடுத்தாராம். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் நவராஜை கத்தியால் குத்தினார்கள் என்று கூறப்படுகிறது.
இதி்ல் காயமடைந்த நவராஜ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து கோமதி ஆனந்தன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications