தேர்தல் தோல்வி: மாஜி அமைச்சர் கொடும்பாவியை எரிக்க அதிமுகவினர் முயற்சி
தென்காசி: தென்காசி அருகே உள்ள வடகரை பேரூராட்சியில் அதிமுக தோல்வியடைந்ததற்கு முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் தான காரணம் என்று கூறி அவரது உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசியை அடுத்த வடகரை பேரூராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அலியார், திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து அலியார் தலைமையிலான அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் வீட்டின் முன்பு கூடி அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அச்சன்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அதிமுகவினரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அமைச்சர் செந்தூர் பாண்டியன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து உரும பொம்மை எரிக்கும் முயற்சியை கைவிட்டனர்.
இது குறித்து நகர செயலாளர் அலியார் கூறியதாவது,
வடகரை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 15 வார்டுகளின் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதிமுக தான் முன்னிலையில் இருந்தது. 16வது வார்டு முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் வார்டு. அந்த வார்டில் உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் மூன்று முறை அவரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டேன். ஆனால் அவர் எனக்கு ஆதரவாக செயல்படவில்லை.
மேலும் உறவினர்களுடன் சேர்ந்து எதிர்த்து வாக்காளிக்குமாறு கூறியதுடன் பணமும் கொடுத்துள்ளார். செங்கோட்டை பகுதியில் அனைத்து பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றிய நிலையில் வடகரையில் மட்டும் தோல்வியைத் தழுவியது. இதனால் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றோம்.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தூர் பாண்டியனிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். இதனால் உருவ பொம்மை எரிப்பை கைவிட்டோம.
நாகூர் மீரானின் துரோகத்தால் தலைவர் பதவி மட்டுமல்லாது 1, 14, 15, 16, 17, 18வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளனர் என்றார்.
இதனால் வடகரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications