தீபாவளியை கனியுடன் கொண்டாட ராஜாத்தியம்மாள் விருப்பம்-சோனியாவிடம் கருணாநிதி வலியுறுத்தல்
டெல்லி: டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, தனது மகள் கனிமொழி தீபாவளிப் பண்டிகைக்குள் வீட்டில்இருக்க வேண்டும் என்று தனது துணைவி ராஜாத்தியம்மாள் விரும்புவதாக கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் கனிமொழியை சிறையில் சந்தித்தபோதும் கனிமொழிக்கு கருணாநிதியும், ராஜாத்தியம்மாளும் ஆறுதல் கூறி விட்டு வந்துள்ளனர்.
நேற்று டெல்லி சென்ற கருணாநிதி அங்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு சோனியா காந்தியை, கருணாநிதி நேற்றுதான் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சோனியாவிடம் கருணாநிதி நலம் விசாரித்தார். மேலும் கனிமொழி குறித்தும் பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், கடந்த ஐந்து மாத காலமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி தீபாவளிக்குள் தங்களது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று ராஜாத்தியம்மாள் விரும்புவதாக கருணாநிதி சோனியாவிடம் கூறினார்.
தனது மனைவியின் வலியுறுத்தலின் பேரிலேயே சோனியாவை கருணாநிதி சந்தித்ததாக கூறப்படுகிறது. தனது மகளும், பேரனும், தீபாவளிக்குள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று கருணாநிதியிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார் ராஜாத்தியம்மாள் என்றும் கூறப்படுகிறது.
கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க சிபிஐ தரப்பிலிருந்து எந்த முட்டுக்கட்டையும் இருக்கக் கூடாது. இதை காங்கிரஸ் தரப்பு உறுதி செய்ய வேண்டும் என்று கருணாநிதி மூலம் ராஜாத்தியம்மாள் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து கனிமொழி ஜாமீன் குறித்து உத்தரவாதமான பதில் ஏதும் வரவில்லை என்று தெரிகிறது. முன்னதாக டெல்லி வந்து சேர்ந்ததும், மத்திய சட்ட அமைச்சரான சல்மான் குர்ஷித் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போதும் கனிமொழியின் ஜாமீன் குறித்து கருணாநிதி பேசியதாக தெரிகிறது. ஆனால் உறுதியான பதிலை குர்ஷித் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கருணாநிதியின் டெல்லி பயணத்தை வெற்றி என்று கூற முடியாத நிலையே ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
கனிமொழியிடம் ஆறுதல்
இதற்கிடையே, திகார் சிறைக்குச் சென்ற கருணாநிதியும், ராஜாத்தியம்மாளும் அங்கு கனிமொழியை சந்தித்துப் பேசினர். அதேபோல கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரையும் கருணாநிதி சந்தித்துப் பேசினார். அப்போது இருவருக்கும் கருணாநிதி ஆறுதல் கூறிப் பேசியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications