ஓட்டுக்கு லஞ்சம் வழக்கு: எம்பி அமர் சிங் ஜாமீனில் விடுதலை
டெல்லி: எம்பிக்கள் வாக்களிகக்க லஞ்சம் கொடுத்த வழக்கில் கடந்த மாதம் 6ம் தேதி கைது செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி அமர் சிங்கை டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க எம்.பி.களுக்கு பணம் கொடுத்த வழக்கில் எம்.பி.யும், சமாஜ்வாடி கட்சி முன்னாள் உறுப்பினருமான அமர் சிங் கடந்த மாதம் 6ம் தேதி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். தனது உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமர் சிங்கிற்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டதையடுத்து கடந்த மாதம் 12ம் தேதி அவர் டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது வரை அவர் அங்கு தான் உள்ளார்.
இதையடுத்து அவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த 19ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அது 24ம் தேதி (இன்று) வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே அமர் சிங் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அவர் எப்பொழுதும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய மருத்துவக் கழக மருத்துவமனையின் அறிக்கையை டெல்லி போலீசார் உயர் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.
இந்நிலையில் அமர் சிங் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் ரூ. 1 கோடி பிணையத் தொகை செலுத்த வேண்டும், நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற 2 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications