சிவகங்கையில் எஸ்.ஐ.யை துரத்திச் சென்று கத்தியால் குத்திய கும்பலுக்கு வலைவீச்சு
சிவகங்கை: சிவகங்கையில் எஸ்ஐ ஒருவரை துரத்திச் சென்று கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மதகுப்பட்டியில் சிறப்பு எஸ்ஐ ஆக இருப்பவர் கார்மேகம். நேற்று முன்தினம் இரவு 1.30 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பினார். அண்ணாமலை நகரில் வசிக்கும் அவரது வீட்டின் அருகே உள்ள சாலை வரை உடன் பணிபுரியும் மற்றொரு எஸ்ஐ தனது பைக்கில் கொண்டுவந்து விட்டார்.
வீட்டின் அருகே நடந்து சென்றபோது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் கார்மேகத்தை வழிமறித்தது. அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க கார்மேகம் ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை துரத்திப்பிடித்து அவரை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடிவிட்டது.
இதில் படுகாயமடைந்த கார்மேகம் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவகங்கையைச் சேர்ந்த கோபால், செந்தில், ஜெயபால், முருகன், பரமசிவம் ஆகியோரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications