வெள்ளப் பெருக்கால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சுருளி அருவி உள்ளது. அந்த அருவியில் குளிக்க தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வருவதால் அங்கு எப்பொழுது பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதும்.
இந்த நிலையில் மேகமலை ஹவேசில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் கற்கள், கட்டைகள் போன்றவை அடித்து வரப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தூரத்தில் நின்று அருவியின் அழகை பார்த்து செல்கின்றனர்.
ராஜபாளையத்தில் காட்டாற்று வெள்ளம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அய்யனார் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். அங்கு வழிபாடு நடத்துவதற்காக சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ஆற்றை கடந்து கோவிலுக்கு சென்றனர். அப்போது ஆற்றில் சிறிதளவு தண்ணீரே சென்றது.
திடீர் என்று அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோவிலுக்கு சென்றவர்கள் ஆற்றை கடக்க முடியாமல் தத்தளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுமார் 50 பேரை கயிறு மூலம் ஆற்றை கடக்க செய்து பத்திரமாக மீட்டனர்.












Click it and Unblock the Notifications