ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை: எஸ்.எம்.எஸ். மூலம் எச்சரிக்கை
நெல்லை: ரயிலில் பட்டாசுகள் கொண்டு செல்வதை கண்டுபிடித்தால் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் எஸ்எம்எஸ் மூலம் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது பட்டாசுகள் தான். தீபாவளிக்காக வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு ரயில், பேருந்துகளில் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். ரயில், பேருந்துகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி பலர் பட்டாசுகளை தீபாவளி நேரத்தில் கொண்டு செல்கின்றனர்.
இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை எல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை. இந்த ஆண்டு உளவுதுறை எச்சரித்ததன் பேரில் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு ரயில் நிலையங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயிலில் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் புதிய முயற்சியை கையாண்டுள்ளனர். அவர்கள் எஸ்எம்எஸ் மூலம் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் பயணத்தில் பட்டாசு கொண்டு செல்வதை கண்டுபிடித்தால் சம்பந்தப்பட்ட பயணிக்கு ரயில்வே சட்டத்தின்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை எச்சரித்துள்ளனர். இந்த எஸ்எம்எஸ்களை பார்த்த பலர் தற்போது பேருந்துகளில் கூட பட்டாசுகளை கொண்டு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications