கடலோர தமிழகத்தில் விடாது பெய்யும் மழை-வேகம் பிடிக்க்கிறது வட கிழக்குப் பருவ மழை

வட கிழக்குப் பருவ மழை நேற்று தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்தது. வங்கக் கடலில் மன்னார் வளைகுடா முதல் ஆந்திர கடலோரம் வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் கடலோர தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இடி மின்னலுடன் மழை
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் விடிய விடிய பெய்த மழை இன்று காலையிலும் விடாமல் தொடர்கிறது. இதனால் நகரமே இருண்டு போய்க் காணப்படுகிறது. பல பகுதிகளில் கனத்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது.
பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. குறிப்பாக கோயம்பேடு பகுதியில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதிலும் ஆம்னி பேருந்துகள் நிற்கும் பஸ் நிலையம் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. தீபாவளிக்காக ஊருக்குப் போக கிளம்பி வந்த மக்கள் மழையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
அதேபோல அசோக் நகர் உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள் விழுந்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இடி மி்ன்னலுடன் இரவில் கன மழை பெய்ததால் மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். மேலும் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் வாகனப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னையில் இன்று காலை வரை நுங்கம்பாக்கத்தில் 52.50 மில்லி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 37.20 மி.மீ.யும் மழை பதிவாகி உள்ளது.
அதேசமயம், பருவ மழை தொடங்கியிருப்பதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் தங்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும், விவசாயிகளுக்கும், கிராமப்புறங்களுக்கும் நிறைய பலன்கள் ஏற்படும் என்பதால் இந்த மழையை வரவேற்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகம் முழுவதும்
இதேபோல தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
கரூர், குளித்தலை பகுதியிலும் மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. காலையில் லேசான மழை பெய்தது. இரவில் பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
தேனி மாவட்டத்திலும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. சங்கரன்கோவிலில் நேற்று கனத்த மழை பெய்து மக்களை பெரும் அவதிக்குள்ளாகி விட்டது.
தஞ்சையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை நல்ல மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக மதுக்கூரில் 44.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மின்னல் தாக்கி ஒருவர் பலி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கனகரப்பட்டு கிராமத்தில் மின்னல் தாக்கியதில் ராஜ்குமார் என்ற இளைஞர் மரணமடைந்தார். அதேபோல ராமையா என்பவர் படுகாயமடைந்தார்.












Click it and Unblock the Notifications