ராஜபக்சேவுக்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் போர் குற்ற வழக்கு

ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் இலங்கைத் தமிழரான அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் (வயது 63) என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இவர் இப்போது ஆஸ்திரேலிய பிரஜை ஆவார்.
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க ராஜபக்சே ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வரவுள்ள நிலையில் மெல்போர்ன் நீதிமன்றத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெகதீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின்போது இலங்கையில் தமிழர்களின் வீடுகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள் மற்றும் சமூக மையங்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய பயங்கரமான குண்டு வீச்சுத் தாக்குதலிலும், இலங்கை விமானப் படை நடத்திய வான் வழி தாக்குதல்களிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவங்கள் அனைத்துமே போர் குற்றங்களாகும். ராஜபக்சே செய்த இந்த பயங்கரமான குற்ற நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் துன்பப்படுகிறார்கள். அதை உலகம் முழு அளவில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் நானே என் கண்களால் நேரில் பார்த்து அதிர்ந்து போனேன். மருத்துவமனைகளில் இருந்த நேயாளிகள் கூட கொல்லப்பட்டனர். சிகிச்சைக்காக வந்தவர்களும் கொன்று குவிக்கப்பட்டனர்.
வட பகுதியில் இப்போது உயிருடன் இருப்பவர்கள், எப்படி உயிர் தப்பினார்கள் என்பதே ஆச்சரியமான விஷயம் தான். மருத்துவமனைகளில் மருந்துகள் இருந்த கிடங்குகள் கூட குண்டு வீசி அழிக்கப்பட்டன, ஆம்புல்ஸ்களைக் கூட விட்டு வைக்கவில்லை. அதையும் தாக்கி அழித்துவிட்டனர்.
மருத்துவமனைகள் மீது ரெட் கிராஸ் அடையாளம் மிகப் பெரிய அளவில் வரையப்பட்டிருந்தது. தாக்குதல் நடத்தும் முன் அந்தப் பகுதிகளை ஆளில்லா விமானங்கள் மூலம் இலங்கை விமானப் படை கண்காணித்தது. அவை ரெட் கிராஸ் கட்டுப்பாட்டிலான மருத்துவமனைகள் என்று தெரிந்தும் கூட தாக்கி அழித்து மக்களைக் கொன்று குவித்தனர்.
இவை அனைத்துக்கும் பொறுப்பான நபர் முப்படைகளின் தளபதி என்ற முறையில் அதிபரான ராஜபக்சே தான். இவ்வளவு பெரிய போர்க் குற்றம் புரிந்த அந்த நபர் எனது தேசத்துக்கு (ஆஸ்திரேலியாவுக்கு) சுதந்திரமாக வந்து செல்வதை சகித்துக் கொள்ள முடியவில்லை.
இந்த விஷயத்தில் நீதி கிடைக்க வேண்டும். அவர் குற்றவாளியா இல்லையா என்பதை ஆஸ்திரேலிய நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெகதீஸ்வரன்.
இந்த வழக்கில் விசாரணை தொடர ஆஸ்திரேலிய அட்டர்னி ஜெனரலான ராபர்ட் மெக்கிளிலாண்ட் ஒப்புதல் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு உரியது தான் என்று விக்டோரியா மாகாண தலைமை மாஜிஸ்திரேட் கடந்த வாரம் அனுமதி தந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு நவம்பர் 29ம் தேதி விசாரிக்கப்படவுள்ளதாக ஜெகதீஸ்வரனின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
1987ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஜெகதீஸ்வரன் 3 வருடங்களுக்குப் பின் அந்த நாட்டுப் பிரஜையானார்.
ராஜபக்சேவுக்கு எதிராக போர் குற்ற வழக்குகள் வேறு சில நாடுகளிலும் தொடுக்கப்பட்டாலும் ஆஸ்திரேலியாவில் தொடரப்பட்டுள்ள முதல் வழக்கு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த வழக்கு விசாரணையே ஆஸ்திரேலிய சட்டத்துக்கு விரோதமானது என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் அனுமதியின்றி வழக்குத் தொடர முடியாது-ஆஸி. பிரதமர்:
இந் நிலையில் ஆஸ்திரேலிய மத்திய அரசின் அனுமதியின்றி இலங்கை அதிபருக்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றில் போர்க் குற்ற வழக்குத் தொடர முடியாது என்று அந் நாட்டுப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications