காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை: மேட்டூர் அணை மூடப்பட்டது
சேலம்: தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக சம்பா நெல் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமாகியுள்ளது. இதனால் தஞ்சை, நாகப்பட்டிணம், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களும் கன மழையை சந்தித்து வருகின்றன.
இந்த மாவட்டங்களில் தற்போது சம்பா நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும் சில பகுதிகளில் குறுவை அறுவடைப் பணிகளும் நடந்து வருகின்றன.
சம்பா பயிருக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. கன மழை பெய்து வருவதால் இரு நாட்களுக்கு முன் நீர் திறந்துவிடப்படுவது 1,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது. இப்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுவிட்டது.
அதே நேரத்தில் இந்த மழையால் தஞ்சை மாவட்டத்தில் சில பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதே போல காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 85.6 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,244 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து தண்ணீர் வினாடிக்கு 2,117 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
மேட்டூர் அணையில் அதிகபட்ச நீர் தேக்க அளவு 120 கன அடியாகும்.












Click it and Unblock the Notifications