அமெரிக்காவின் மாபெரும் நிதி மோசடி: ராஜரத்தினத்தின் கூட்டாளி ரஜத் குப்தாவும் சிக்கினார்!

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி விவரங்களை 'இன்சைடர் டிரேடிங்" மூலம் (நிறுவனங்களின் உள் நிலவரங்களை முறைகேடான வழிகள் மூலம் அறிவது, அதை வைத்து அந்த நிறுவன பங்குகளை வாங்கி அல்லது விற்று லாபம் அடைவது) அறிந்து 75 பில்லியன் டாலர்கள் மோசடி செய்தார் ராஜரத்தினம்.
அமெரிக்க வர்த்தக உலகில் இவ்வளவு பெரிய மோசடியை இதுவரை யாரும் செய்ததில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜரத்தினத்துக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் ராஜரத்தினத்துக்கு இந்த மோசடியில் உதவி செய்த இந்தியரான ரஜத் குப்தா மீதும் அமெரிக்காவின் எப்பிஐ போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான ரஜத் குப்தா, தான் பணியாற்றிய புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்ஸைர் இன்வஸ்ட்மென்ட், கோல்ட்மேன் சேக்ஸ் மற்றும் மெக்கிங்ஸ்லி நிதி நிறுவனம் ஆகியவற்றின் நிதி விவரங்களை ராஜரத்தினத்துக்குத் தந்துள்ளார்.
இதை வைத்துக் கொண்டு ராஜரத்தினம் தனது கலியோன் 'ஹெட்ஜ் பண்ட்' (பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படும்போது அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க நிதி ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம்) நிறுவனம் மூலம் இந்த நிறுவனங்களின் பங்குகளை பரிவர்த்தனை செய்துள்ளார்.
இந்த நிறுவனங்களின் நிதி நிலைமை நன்றாக இருந்தபோது பங்குகளை வாங்கியுள்ளார், நிதி நிலை சரியத் தொடங்கியபோது அதை ரஜத் குப்தா மூலம் முன்பே அறிந்து பங்குகளை விற்று நஷ்டத்திலிருந்து தப்பியுள்ளார். ஆனால், இவரது நஷ்டம் பங்குகளை வாங்கிய பிறர் மீது விழுந்தது. இப்படியாக ராஜரத்தினம் தனது முறைகேடுகளால் ஈட்டிய தொகை 75 பில்லியன் டாலர்.
இவருக்கு ரஜத் குப்தா தவிர மேலும் ஏராளமான கார்பரேட் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் உதவியுள்ளனர். இதற்காக இவர்களுக்கும் பணத்தைக் கொட்டித் தந்துள்ளார் ராஜரத்தினம்.
62 வயதான ரஜத் குப்தா அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்பட்ட இந்தியர் ஆவார். உலகின் முன்னணி நிறுவனங்களான புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்ஸைர் இன்வஸ்ட்மென்ட், கோல்ட்மேன் சேக்ஸ், மெக்கிங்ஸ்லி நிதி அமைப்பு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களில் மிக உயர்ந்த பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந் நிலையில் இப்போது இவர் மீது 6 நிதி மோசடி வழக்குகளைத் தொடர்ந்துள்ளது எப்பிஐ. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 105 வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ரஜத் குப்தா 10 மில்லியன் டாலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் மீதான விசாரணை வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளது.












Click it and Unblock the Notifications