முன்னாள் எம்.எல்.ஏ க.சுப்பு மரணம் - கருணாநிதி நேரில் அஞ்சலி

தொழிற்சங்க தலைவராக அறியப்பட்ட சுப்பு, சிபிஐ சார்பில் 1967-ல் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் சுப்பு. பின்னர் 1969-ல் திமுகவில் இணைந்தார். திமுகவில் மேடைப்பேச்சாளராகவும் கட்சியில் செல்வாக்கு மிக்க நபராகவும் திகழ்ந்தார்.
திமுக சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்துக்குச் சென்றவர். கடந்த 1971 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் ராஜபாளையம், வில்லிவாக்கம் தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.
ஆனால் 1978-ல் எம்ஜிஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். எம்எல்சியாக தேர்வு செய்யப்பட்டார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ், தமாகா என கட்சிகளில் இருந்தார். 2001-ல் மீண்டும் அதிமுகவுக்கு வந்தார்.
ஆனால் 2007-ம் ஆண்டு கருணாநிதியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அதிமுகவிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார் சுப்பு. அதே ஆண்டு மீண்டும் திமுகவில் சேர்ந்தார்.
இவர், மனைவி, மகன், 2 மகள்களுடன் லாயிட்ஸ் காலனி வீட்டில் வசித்துவந்தார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 69.
மறைந்த க.சுப்பு உடலுக்கு திமுக தலைவர் கலைஞர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தோழர் சுப்புவின் மறைவு, பாட்டாளி வர்க்கத்திற்கு மாபெரும் இழப்பு. அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணிகளை நேரடியாகவே அறிந்தவன் நான். அவருடைய பேச்சாற்றலும், வாதத் திறமையும் பகைவர்களையும் வசீகரிக்கக் கூடியவை என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன். அவருடைய மறைவு தொழிலாளர் வர்க்கத்திற்கும், சாதாரண சாமான்ய மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பெரும் இழப்பாகும்.
அவருடைய குடும்பத்தாருக்கும், மனைவி மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
வைகோ இரங்கல்
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், அன்பு சகோதரர் க.சுப்பு மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்," என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications