என் பெயரை மறைக்கிறாங்களே! - கருணாநிதி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கை:
கேள்வி: 200 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள அரசு நிலத்தைத் தோட்டக்கலை சங்கத்திற்கு அ.தி.மு.க. அரசு வழங்கியது பற்றி எழுதியிருந்தீர்களே, அது என்னவாயிற்று?
பதில்: அண்ணா மேம்பாலத்திற்கு மிக அருகிலே அமைந்துள்ள; அரசுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள - 118 கிரவுண்டு நிலத்தை தோட்டக்கலை சங்கத்திற்கு வழங்கி 22.8.2011 அன்று வெளியிட்ட ஆணையின் மூலமாக உத்தரவிட்டுள்ளதை நான் எழுதி; நல்லவர்களும், நடுநிலை நாளேடுகளும் இதனைத் தட்டிக் கேட்க முன்வர வேண்டாமா எனக் கேட்டு எழுதியிருந்தேன்.
அ.தி.மு.க அரசின் சார்பில் முதல்-அமைச்சரோ, எந்த அமைச்சருமோ இன்றுவரை பதில் அளிக்காமல், சென்னை மாவட்ட கலெக்டரை விட்டு பதில் என்ற பெயரில் ஒரு மறுப்பினைத் தெரிவித்திருந்தார்கள். அவரும் அந்த இடம் வழங்கப்படவில்லை என்று மறுக்கவில்லை.
கொடுத்தது உண்மைதான்; தோட்டக்கலைச் சங்கத்தின் கவுரவ செயலாளர், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி நேரில் ஆஜராகி கொடுத்த ஆவணங்களின் அடிப்படையிலே அந்த நிலத்தை வழங்கினோம் என்று சொல்லியிருக்கிறார். அரசு பதில் அளிக்காமல், கலெக்டர் பொறுப்பிலே இருப்பவரின் மூலமாக விளக்கம் அளித்திருப்பது ஒன்றே என் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது என்று நான் மீண்டும் தெளிவுபடுத்திய பிறகும், அரசின் சார்பில் எந்தப் பதிலும் வரவில்லை.
சட்டம்-ஒழுங்கு லட்சணம்
கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு?
பதில்: ஆட்சிப் பொறுப்பேற்ற ஐந்து மாதங்களுக்குள் பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு உயிர்களை பலி வாங்கிய ஒரு நிகழ்ச்சி போதாதா?
கேள்வி: தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்த ஜெயலலிதா, அண்ணா நூற்றாண்டு நினைவாக தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மிகப்பெரிய நூலகத்தை முறையாக பாதுகாக்கிறாரா?
பதில்: அதற்கும் அந்த கதிதான்! பொதுவாக தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட இதுபோன்ற இடங்களிலே உள்ள கல்வெட்டுக்களில் என் பெயர் இருப்பதைப் பொறுத்துக்கொள்ளாமல் இலை, தழை, பூக்களைக் கொண்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இந்த ஆட்சியினர் அண்ணா பெயரில் தி.மு.க. ஆட்சி எழுப்பியுள்ள அந்த நூலகத்தைக் கூடப் புறக்கணிக்கின்றனர் என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.
கேள்வி: வருவாய்த் துறையிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் ஐ.ஏ.எஸ். தகுதி கொடுப்பதிலே தவறு நடப்பதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்: தேர்வாணைக்கழகத்தின் மீது தமிழக அரசு பூதாகாரமாக நடவடிக்கை எடுக்கின்றது. ஆனால் வருவாய்த் துறையிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் ஐ.ஏ.எஸ். தகுதி கொடுப்பதற்கு நான்கு இடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்தப் பதவியை ஏலம் விட்டு, யார் அதிகத் தொகை தருகிறார்களோ அவர்களுக்கு வழங்கப் போவதாகவும், குறைந்தபட்ச தொகையாக ஒரு கோடி ரூபாய் என்று நிர்ணயித்திருப்பதாகவும் பத்திரிகைகளிலேயே செய்தி வந்துள்ளது. எந்த அளவிற்கு அது உண்மை என்பது போகப் போகத் தெரியும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications