தோற்றவர்கள் வென்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் - முக ஸ்டாலின்
கடலூர்: உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் தோற்ற ஆளும்கட்சி வேட்பாளர்களை வென்றவர்களாக அறிவித்துள்ளனர் என்று குற்றம்சாட்டினார் முன்னாள் துணை முதல்வர் முக ஸ்டாலின்.
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் இருக்கிறார். இவரை முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.
இதன் பின் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
கேள்வி: முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
பதில்: இந்த கேள்வியை முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டும்.
கேள்வி: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. வென்று உள்ளது. இதனால் நிர்வாகம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?
பதில்: சட்டமன்ற தேர்தலில் மக்களின் மனமாற்றத்தின் காரணமாக அ.தி.மு.க. அதிக இடங்களை பெற்று இருக்கலாம். ஆனால் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் 50 சதவீதம்பேர் தோற்றவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் தோற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கேள்வி: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. பிடித்து இருப்பதால் தமிழக அரசு தவறு செய்தால் யார் தட்டி கேட்பார்கள்?
பதில்: ஏற்கனவே இது சம்மந்தமாக நீதிமன்றத்திற்கு சென்று உள்ளோம். ஆனால் இப்போது கேள்வி கேட்க்க கூடிய இடத்தில் பத்திரிகைகள்தான் உள்ளன.
கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பிடித்ததற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: தேர்தல் ஆணையம் மட்டும் உடந்தை இல்லை. ஆட்சியில் உள்ளவர்கள் உடந்தையும் உள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications