அந்தமான் சென்று 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை அபகரித்த 2 தமிழக ஜோதிடர்கள் கைது
ஏரல்: அந்தமானுக்கு சென்ற தமிழக ஜோதிடர்கள் இருவர் பரிகாரம் செய்வதாகக் கூறி அங்குள்ள 3 பேரிடம் 30 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு அந்தமான் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஏரல் அருகே உள்ள சூலைவாய்க்கால் மகா கணபதியார் புரத்தைச் சேர்ந்தவர் அழகிரி மகன் கணேசன். இதே ஊரைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் வேல்முருகன். இவர்கள் இருவரும் ஜாதகம் மற்றும் குறி சொல்லி வந்தனர். அவர்களிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களிடம் தோஷங்களுக்கு பரிகாரம் செய்வதாகக் கூறி பணம் வசூலிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு கணேசனும், வேல்முருகனும் அந்தமானுக்கு சென்றனர். தெற்கு அந்தமான் கேப்டவுனில் வசித்து வரும் கண்ணன், போர்ட் பிளேயர் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த திருச்செல்வம் மகன் காளிமுத்து, தெற்கு அந்தமானில் உள்ள மணிகண்டன் ஆகியோரது வீட்டுக்கு சென்று ஜாதகம் மற்றும் கைரேகை பார்த்தனர்.
அப்போது உங்கள் குடும்பத்திற்கு தோஷம் உள்ளது என்று பயமுறுத்திய அவர்கள் இதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறி ரூ.25,000 வசூலித்தனர். பின்னர் அங்கேயே யாகம் நடத்தினர். அதன் பின்னர் இங்கு மட்டும் பூஜை செய்தால் போதாது. எங்கள் சொந்த ஊரி்ல் உள்ள கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி நகைகளை கேட்டனர்.
கண்ணனிடம் 10 பவுன் நகை, காளிமுத்துவிடம் 15 பவுன் நகை, மணிகண்டனிடம் 5 பவுன் நகை என மொத்தம் 30 பவுன் நகைகளையும், பூஜைக்காக ரூ. 2 லட்சம் ரொக்கத்தையும் வாங்கிக் கொண்டு தமிழகம் திரும்பினர். பூஜை முடிந்த பின்னர் நகையை திருப்பி தருவதாக கணேசனும், வேல்முருகனும் தெரிவித்தனர். ஆனால் பல மாதங்களாகியும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராததால் கண்ணன், காளிமுத்து, மணிகண்டன் ஆகியோர் அந்தமான் பாம்பிளாஸ்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் மிஸ்ரா, ஏட்டுகள் ஹீமா சலம், மனோஜ் ஆகியோர் தூத்துக்குடி வந்து எஸ்பி நரேந்திர நாயரை சந்தித்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துமாறு கூறினர். அவர்களது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பால்ஜசக் மற்றும் குற்றப்பிரிவு ஏட்டு குமாரசாமி மற்றும் போலீசார் சூளைவாய்க்கால் சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த கணேசன் மற்றும் வேல்முருகனை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் இருந்து பணம், நகை மீட்கப்பட்டது. 2 பேரும் விசாரணைக்காக அந்தமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications