பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் மனம் உடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பண்ருட்டி அருகே உள்ளது வேகாகொல்லை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தெய்வலிங்கம் (32). இவருக்கு கலைச்செல்வி (28) என்ற மனைவியும், கலை முருகன் (3) என்ற மகனும், காவ்யா (6) என்ற மகளும் உள்ளனர்.
தெய்வலிங்கம் சமீபகாலமாக கூலி வேலை கிடைக்காமல் திண்டாடி வந்தார். இதனால் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார். போதிய வருமானமும் இல்லாமல், வேலையும் கிடைக்காமல், கடனும் ஏறி வந்ததால் மனம் உடைந்தார் தெய்வலிங்கம்.
மேலும் கொடுத்தவர்களும் கேட்க ஆரம்பித்து நெருக்கடி தந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் சண்முகம் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்புக்கு தனது மனைவியுடன் சென்றார். அங்குஇருவரும் தனித் தனியாக புடவையால் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டனர்.
அதற்கு முன்பு மகன், மகள் இருவரையும் மரக் கிளைகளில் தூக்கில் தொங்க விட்டு கொன்று விட்டனர். காலை தோப்புக்கு வந்த மக்கள் இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.