கேரளாவுக்கு எரிசாராயம் கடத்திய கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஓட்டுநர் பலி
பாலக்காடு: கோவையில் இருந்து கேரளாவுக்கு எரிசாராயம் கடத்திச் சென்ற கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியானார்.
கேரள மாநிலம், பாலக்காடை அடுத்த குதிரான் பகுதியில் மண்ணுத்தி போலீஸ் உதவி கமிஷனர் தாமஸ் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கோவையில் இருந்து வந்த கார் ஒன்றை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.
இதனையடுத்து அந்த காரை போலீசார் துரத்தி சென்றனர். திருச்சூர் மாவட்டம் மண்ணுத்தி அருகே வந்த போது, காருக்கு எதிரே இன்னொரு போலீஸ் வேன் வந்தது. இதில் பயந்து போன ஓட்டுநர் காரை தாறுமாறாக ஓட்டியதால் கட்டுபாட்டை இழந்த கார் அப்பகுதியில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
காரை துரத்தி சென்ற போலீசார் துரிதகதியில் செயல்பட்டு விபத்துக்குள்ளான காரை மீட்டனர். அதில் கார் ஓட்டுநர் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினார். படுகாயமடைந்த இன்னொரு வாலிபர் திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
போலீஸ் விசாரணையி்ல் காரை ஓட்டி வந்தவர் அனீஷ்(26) என்பதும், காயமடைந்தவர் பிரசாத் என்பதும் தெரிய வந்தது. கோவை மாவட்டம் காந்திபுரத்தைச் சேர்ந்த 2 பேரும் சேர்ந்து கோவையில் இருந்து கேரளாவுக்கு எரிசாராயம் கடத்த முயன்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.
காரில் 8 கேன்களில் வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.