திருச்செந்தூரில் விமரிசையாக நடந்தேறியது சூரசம்ஹாரம்- லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தேறியது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 26ம் தேதி புதன்கிழமை தொடங்கியது. அன்றுமுதல் தினமும் விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட பூஜை, அபிஷேகம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாரதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடந்தது. இதற்காக இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபதரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
காலை 9 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 3 மணிக்கு திருவாடுதுறை கந்தசஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் கடற்கரைக்கு முருகப் பெருமான் எழுந்தருளினார். மாலை 4.35 மணிக்கு கடற்கரையில் சூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது.
முதலில் கஜமுகத் தலையுடன் வந்த சூரனின் தலையை கொய்து சம்ஹாரம் தொடங்கியது. அடுத்து சிங்கத் தலை வதம் செய்யப்பட்டது. 3வதாக சுயமுகத் தலை வதம்செய்யப்பட்டது. கடைசியாக சேவல் தலையை வதம் செய்து சூரசம்ஹாரம் நிறைவடைந்தது.
சூரசம்ஹாரத்தின் போது கூட்ட நெரிசலை தவிர்க்க 2 இடங்களில் பெரிய டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டிருந்தன.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் நெல்லையிலிருந்து சிறப்பு ரயில்களும் இயக்கபப்ட்டன. விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள், சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பின் தங்கள் விரதத்தை முடித்து கொள்கின்றனர்.
நாளை இரவு குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.இதேபோல் பழனி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களிலும், சென்னை வடபழனி முருகன் கோவிலிலும் இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தேறியது.