அத்வானியை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கண்டுபிடித்த 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம்: பாஜக
சென்னை: தமிழகத்தில் ரதயாத்திரை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி செல்லும் பாதையில் வைத்திருந்த வெடிகுண்டை கண்டுபிடித்த இருவருக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஊழல், லஞ்சத்தை ஒழிக்கும் போராட்டத்தின் அங்கமாக மக்கள் விழிப்புணர்வு யாத்திரை நடத்திக் கொண்டிருக்கும் அத்வானியின் ரதயாத்திரை மதுரையிலிருந்து தென்காசி செல்லும் வழியில் அத்வானியை கொலை செய்யும் நோக்கத்தோடு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர்.
மதுரை அருகே ஆலம்பட்டி கிராமத்திற்கு அருகே பாலத்திற்கடியில் வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுகளை கண்டுபிடித்து அதனை காவல்துறைக்கு தெரிவித்து பெரும் இழப்பில் இருந்து தடுத்த செல்வராஜ் மற்றும் செல்வம் ஆகியோர்களின் சிறந்த செயல்பாட்டை பாரதீய ஜனதா கட்சி தலைவணங்கி பாராட்டுகிறது. அவர்களது பணியை பாராட்டி 3ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் வைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், கவுரவித்தும் தேசிய இணை பொதுச் செயலாளர் சதீஸ் சிறப்பு செய்ய உள்ளார்.
இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் பணமுடிப்பு வழங்கவும் தமிழக பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. அத்வானி யாத்திரைக்கு முழு பாதுகாப்பு அளித்த தமிழக முதல்வருக்கும், காவல்துறைக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். காவல்துறை உடனடியாக குண்டு வைத்த உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications