2ஜி பாரத்தை திமுக தலையில் இறக்கும் காங்கிரஸ்: அத்வானி
ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக பாஜக மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கோவா தலைநகர் பனாஜியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
மன்மோகன் சிங் ஒரு வீக்கான பிரதமர். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நரசிம்ம ராவ் பிரதமராக இருக்கையில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் சிறப்பாக செயல்பட்டார். அப்போது கூட அவரிடம் இருந்து துணிச்சலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
மன்மோகன் சிங்கை வீக்கானவர் என்று கூறுவது கடுமையானதல்ல. மன்மோகன் நேர்மையான மனிதர். நீங்கள் ஏன் எப்பொழுது பார்த்தாலும் அவரையே குறை கூறுகிறீர்கள் என்று முன்பெல்லாம் மக்கள் பாஜகவை கேட்பார்கள். ஆனால் பாஜகவினர் கூறுவது தான் சரி என்பது அவர்களுக்கு தற்போது புரிந்துள்ளது.
மன்மோகன் சிங்கும் சரி, சோனியா காந்தியும் சரி ஊழலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி திமுக மீது 2ஜி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது.
2ஜி என்பது தனி மனிதன் செய்த ஊழல் அன்று. அதில் மத்திய அமைச்சர்களுக்கும் பங்கு உள்ளது. அதனால் அது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று நானும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறேன் என்றார்.