மழை சேத தடுப்பு பணிகளில் ஈடுபட 14 அமைச்சர்களுக்கு ஜெயலலிதா உத்தரவு
சென்னை: தமிழகத்தில் மழை நீடிக்கும் என்பதால் 14 அமைச்சர்களை கடலோர மாவட்டங்களுக்கு நேரில் சென்று மழை சேத தடுப்புப் பணிகளை ஆய்வு செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை நீங்கலாக 12 கடலோர மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பொருட்டு, முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. மேலும் இந்த பருவமழையால் அடுத்த ஒரு வார காலத்துக்கு கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாநிலத்தில் மழையால் இதுவரை எந்த வித சேதமும் ஏற்படாத போதிலும், 12 கடலோர மாவட்டங்களிலும் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வுக்கு 14 அமைச்சர்கள் நியமனம்
கடலோர மாவட்டங்களும், அந்த மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் அமைச்சர்களும் விவரம்:
திருவள்ளூர் மாவட்டம் - கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் பி.வி.ரமணா, காஞ்சீபுரம் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா.
கடலூர் - சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம், விழுப்புரம் - பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.
நாகை - மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம்.
புதுக்கோட்டை - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன்.
ராமநாதபுரம் - கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
தூத்துக்குடி - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லபாண்டியன்,
திருநெல்வேலி - கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்துறை அமைச்சர் பி.செந்தூர் பாண்டியன்.
கன்னியாகுமரி - வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால். மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications