ஊழல் வழக்கில் கைதான கேரள மாஜி அமைச்சர் பிள்ளை விடுதலை
திருவனந்தபுரம்: ஊழல் வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வந்த கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளை கேரள உதய தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டார்.
கேரளாவில் இடமழையார் நீர்மின்திட்ட ஊழல் வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளைக்கு உயர் நீதிமன்றம் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கேரள உதய தினத்தை முன்னிட்டு 138 கைதிகளை விடுதலை செய்ய கேரள அரசு முடிவு செய்தது. இந்த பட்டியலில் பாலகிருஷ்ண பிள்ளையின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
நேற்று காலை பாலகிருஷ்ண பிள்ளை சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனைக்கு திருவனந்தபுரம் மத்திய சிறை கண்காணிப்பாளர் பிரதீப் நேரடியாக சென்று அரசின் விடுதலை உத்தரவை அவரிடம் அளித்தார். எனினும் அவர் சிகிச்சையில் உள்ளதால் சில நாட்கள் கழித்தே வீட்டுக்கு செல்வார் என தெரிகிறது.
பாலகிருஷ்ண பிள்ளையை அரசு விடுதலை செய்தது கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாலகிருஷ்ண பிள்ளையி்ன் விடுதலையை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழககு தொடர கோரி உயர் நீதிமன்றத்தில் கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் நேற்று மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதிகள் சதாசிவம், சவுகான் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றது.












Click it and Unblock the Notifications