மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமாக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டதாலும், பாசன ஏரிகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும் வெளியேறிய நீர் வயல்களில் புகுந்து நெற்பயிரை மூழ்கடித்துள்ளது. தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களிலும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாது திகைத்துள்ளனர்.
உரம் விலை உயர்வு, விதை நெல் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு நெல் பயிரிட்ட விவசாயிகள் தற்போது இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு கண்ணீரில் வாடுகின்றனர். அவர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தது ரூ.20,000 இழப்பீட்டுடன், அடுத்து அவர்கள் பயிர் செய்வதற்கு தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருட்களையும் தமிழக அரசு வழங்கவேண்டும்.
கடந்த சில ஆண்டுகளில் மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசு குழு வந்து பாதிப்பை மதிப்பீடு செய்தது. ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட இழப்பீடு வழங்கவில்லை. இதனால் உழவர்களுக்கு போதிய இழப்பீடு கிடைக்கவில்லை. இந்த முறை மத்திய அரசிடம் கடுமையாக வலியுறுத்தி மழை வெள்ள பாதிப்பிற்கான இழப்பீட்டை பெறுவதுடன், தமிழக அரசும் அதன் பங்கை சேர்த்து உழவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவேண்டும்.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தை எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான பிரீமியத்தையும் மாநில அரசே செலுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.