கனிமொழிக்கு ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறது திமுக
டெல்லி: டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறது திமுக.
எப்படியும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விடும். அவரை கையோடு சென்னைக்கு அழைத்துச் சென்று விடலாம் என்ற பெரும் நம்பிக்கையில் டெல்லியில் முகாமிட்டிருந்தனர் திமுக தலைவர்கள்.
கனிமொழியின் அணன்ன்கள், மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர், கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள், கணவர், மகன் என அனைவரும் டெல்லியில் காத்திருந்தனர். பாலு, ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர், மகன் ஆகியோர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
ஆனால் கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ராசாத்தி அம்மாள் கண் கலங்கி அழுதார். கனிமொழியும் கூட தீர்ப்புக்கு முன்பு வரை உற்சாகமாக காணப்பட்டார். பின்னர் அவரும் சோகமாகி விட்டார்.
இதற்கிடையே, கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளது திமுக. அங்கும் ஒரு வேளை நிராகரிக்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடவும் திமுக முடிவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.