நூலகத்தை மாற்றி மருத்துவமனை அமைப்பது அறிவற்ற செயல்: ராமதாஸ்

இது குறித்து் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை கோட்டூர்புரத்தில் செயல்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் அங்கிருந்து எழும்பூரில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும், அந்த இடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். தமிழக அரசின் இந்த முடிவு கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ.170 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் முதல் பார்வையற்றோர் வரை அனைவரும் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை படிப்பதற்கு வசதிகள் உள்ளன.
ஆராய்ச்சி மாணவர்களுக்கும், போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் இது ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது. இந்த நூலகம் மிகப் பெரிய தகவல் களஞ்சியமாக மட்டுமின்றி சென்னை மாநகரின் புதிய அடையாளமாகவும் உள்ளது.
இத்தகைய வசதி கொண்ட நூலகத்தை இட மாற்றம் செய்து விட்டு அங்கு குழந்தைகள் நல மருத்துவமனையை அமைப்பது நடைமுறை சாத்திய மில்லாதது. சென்னையில் புதிய குழந்தைகள் நல மருத்துவமனை அமைப்பது யாரும் எதிர்க்கவில்லை. ஏற்கனவே சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல மருத்துவமனை கவனிப்பாரின்று சீர்கெட்டு கிடக்கிறது. அதை முதலில் சீரமைக்க வேண்டும்.
சென்னையில் அரசுக்கு சொந்தமான எவ்வளவோ இடங்கள் உள்ளன. அங்கு இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டால் அதை அனைவரும் வரவேற்பார்கள். மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை அகற்றி விட்டு அங்கு மருத்துவமனை அமைக்கப் போவதாக கூறுவது அறிவார்ந்த செயல் அல்ல. அதுமட்டுமின்றி எழும்பூரில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் ஏற்கனவே கடுமையான இட நெருக்கடி நிலவுகிறது. அங்கு சுமார் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைப்பது அவ்வளவு எளிதல்ல. ஏற்கனவே சென்னை கோட்டையில் செயல்பட்டு வந்த பாவேந்தர் செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நூலகம் அங்கிருந்தது மாற்றப்பட்டது.
அந்த நூலகம் புதிய தலைமை செயலகக் கட்டிடத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. முந்தைய ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இட மாற்றம் செய்வது கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை கைவிட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து அதே இடத்தில் செயல்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நூலக மாற்றம்: சுப.வீரபாண்டியன் கண்டனம்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது கொடூர மனதின் வெளிப்பாடு என்று திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
உலகில் உள்ளவர்கள் எல்லாம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார்கள், பாராட்டுகிறார்கள். அவர்கள் பாராட்டுகள் யாரைச் சேரும், இதனால் யார் பெயர் நிலைபெறும் என்ற கேள்வி எழுந்ததால் தான் தமிழக அரசு அதை குழந்தைகள் மருத்துவமனையாக்க முடிவு செய்துள்ளது.
கருணாநிதியின் பெயர் நிலைத்துவிடக் கூடாது. கடந்த ஆட்சியின் சிறப்பு யாருக்கும் சென்றுவிடக்கூடாது என்று அரசு நினைக்கிறது. இது ஒரு கொடூர மனிதன் வெளிபாடு என்றே சொல்ல வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications