வருகிறது அமைச்சரவை மாற்றம்-சும்மா இருப்பவர்களுக்கு கல்தா கொடுக்கிறார் ஜெ.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் சரிவைச் சந்தித்தது. குறிப்பாக வேலூர் மாநகராட்சித் தேர்தலில் பெரும்பான்மை பலத்தை முதலில் பெறவில்லை அதிமுக. சில சுயேச்சைகளை இழுத்து வந்தே பெரும்பான்மை பலத்தை பெற்றது அதிமுக.
இதையடுத்து இதுபோன்ற பகுதிகளில் பொறுப்பாளர்களாக இருந்த அமைச்சர்களை நீக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட சில இடங்களில் உண்மையான விசுவாசிகளை கண்டறிந்து, கட்சித் தலைமையே வேட்பாளர்களை அறிவித்திருந்தது. பெரும்பாலான இடங்களில், போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு, மாவட்ட செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது மாவட்ட செயலாளர்கள் பலரும் அமைச்சராக பொறுப்பு வகிப்பதால், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுத்தனர்.
வெற்றியை பாதித்த கோஷ்டி பூசல்
இதன் காரணமாக கோஷ்டி பூசல் ஏற்பட்டு திருவள்ளூர், வேலூர், சிவகங்கை , விருதுநகர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற முடியவில்லை. கோஷ்டி மோதல்களால், சொற்ப ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்துவிட்டனர். இதனால், வெற்றிபெற வேண்டிய தொகுதிகளில் கூட தோல்வியை சந்திக்க நேர்ந்தது என, அ.தி.மு.க., தலைமை கருதுகிறது. மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் நடந்த தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வின் போது, கட்சியின் முக்கியத் தலைவர்கள் கோஷ்டி மோதல்களுக்கு இடமளித்து, தோல்வியை ஏற்படுத்திவிட்டனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் மற்றும் சொந்த பிரச்னைகளால், கட்சிக்கு ஏற்படுத்திய நெருக்கடி ஆகியன, அமைச்சர்களின் மாற்றத்துக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
பல பகுதிகளில் அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே சீட் தந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து போராட்டங்களும் வெடித்தன. தேனி மாவட்டம் போடியில் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட போட்டி வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டதாக கூறி அவரது அலுவலகத்தை அதிமுகவினர் அடித்து உதைத்தனர்.
வேலூரில் அமைச்சர் டாக்டர் விஜய் சீட் தராமல் மோசடி செய்து விட்டதாக பொதுமக்கள் முன்னிலையிலேயே ஒரு பெண் புகார் தந்தார். அவரை போடி என்று கூறி அவர் திட்டியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அதேபோல சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.கே.என்.சின்னையா மீதும் குற்றச்சாட்டுக்கள் குவிந்தன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குள்ளான சிலர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிகிறது.
செயல்படாத அமைச்சர்கள்
மேலும், சில அமைச்சர்கள், அவர்களின் துறைகளை நிர்வகிப்பதில், போதிய திறமை இல்லாமல் இருப்பதாக, அ.தி.மு.க., தலைமை கருதுகிறது.துறை சார்ந்த முடிவுகளை விரைவுபடுத்தி, திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் சிலர் தவறுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
திருச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தடபுடல் ஏற்பாடுகள் செய்திருந்ததை, முதல்வரே விரும்பவில்லை. இதற்கெல்லாம் தீர்வு ஏற்படுத்தும் வகையில், அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. வெள்ள நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் தலைமையில் ஒப்படைத்துள்ளதால், அவை முடிந்ததும், மாற்றங்கள் இருக்கலாம் என கூறுகின்றனர்.
விபத்தில் மரணமடைந்த அமைச்சர் மரியம் பிச்சை, உடல் நலக்குறைவால் இறந்த கருப்பசாமி ஆகியோரால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது.
ஒருவருக்கு ஒரு பதவி
வரவிருக்கும் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, ஒருவருக்கு ஒரு பதவி என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், பலருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாடு வரும், 13, 14 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளதால், அதிலிருந்து கிடைக்கும் தகவல்களைக் கொண்டும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலரது இலாகாக்கள் மாற்றப்பட உள்ளன. சிறப்பாக செயல்படும் அமைச்சர்களிடமிருந்து அவர்கள் வகித்து வரும் மாவட்ட செயலர் பதவியோ, கட்சிப் பதவியோ திரும்ப பெறப்படும். புதியவர்களுக்கு சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிமுக வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.
அமைச்சர் பதவி போய் விடக் கூடாது என்ற அச்சத்தில் அமைச்சர்களும், அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் பலரும் தங்களது இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications