ஐரோப்பிய பொருளாதார பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் - மன்மோகன்
டெல்லி: ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்னைக்கும், அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்களுக்கும் தீர்வுகாண விரைவில் முடிவு எடுக்கப்பட வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸின் கேன்ஸ் நகரில் ஜி-20 மாநாடு வியாழக்கிழமை தொடங்குகிறது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்கிறார். மாநாட்டுக்கு புறப்படும் முன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் பிரச்னை குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண சில கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. ஏனெனில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அந்த நாடுகளைச் சார்ந்தே அமைந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னை சர்வதேச பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேன்ஸ் மாநாட்டில் இது முக்கியப் பிரச்னையாக எடுத்துக் கொள்ளப்படும். சர்வதேச பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
சர்வதேச அளவில் சாதகமான பொருளாதார சூழ்நிலைகள் இருந்தால்தான், இந்தியா போன்ற வளரும் நாடுகள் பிற சவால்களை எளிதில் எதிர்கொள்ள முடியும். சர்வதேச அளவிலான வங்கிகள் மூலம்தான் வளரும் நாடுகள் தங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி பெற முடிகிறது. எனவே சர்வதேச வங்கிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும்.
சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த நிர்வாகம் தொடர்பாகவும் ஜி 20 மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. இந்தியாவுக்கு இது மிகவும் முக்கியமான விஷயம். வளர்ச்சிப் பணிகளில் பிறநாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராகவுள்ளது. சர்வதேச நிதி, பணக் கொள்கைகளில் வளர்ச்சிக்கு உகந்த மாற்றங்களை ஏற்படுத்தலாம்," என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications