ராமதாஸை இதுவரை யாரும் பேசாத வகையில் மிக இழிவாகப் பேசினார் வேல்முருகன்- ஜி.கே.மணி

முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் நீக்கம் குறித்து ஜி.கே.மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
வேல்முருகன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில் பாமக தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார். ராமதாஸை இதுவரை யாரும் பேசாத வகையில் மிகவும் அருவருக்கத்தக்க, இழிவான வார்த்தைகளால் வேல்முருகன் ஒருமையில் பேசியுள்ளார். இதைக்கேட்டு பொறுக்கமுடியாத பல நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். அதன்பிறகும் பாமக பொதுச்செயலர் வடிவேல் ராவணனைப் பற்றி தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
இதைத் தாங்க முடியாத கடலூர் மாவட்ட நிர்வாகிகள், வேல்முருகனை இனியும் கட்சியில் வைத்திருக்கக்கூடாது என்றும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
எனினும் வேல்முருகன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்தனர். ஆனால் வேல்முருகனோ தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் ஒருசில நிகழ்ச்சிகளில் பங்கேற்றதைத் தவிர வேறு கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் இருந்துவந்தார். உள்ளாட்சித் தேர்தலிலும் அவர் பாமகவுக்காக பணியாற்றவில்லை.
இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி பாமக தலைமை நிர்வாகக் குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய பாமக பொதுச்செயலர் வடிவேல் ராவணன் 3 மாதங்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் தம்மைப் பற்றி வேல்முருகன் பேசிய பேச்சின் முழு வடிவத்தையும் வேதனையுடன் படித்துக் காட்டினார். பாமகவிற்காக ஆரம்பத்திலிருந்தே அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்துவரும் தம்மை எவரும் இப்படியெல்லாம் விமர்சித்ததில்லை என்றும் தம்மையும், ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளையும் விமர்சித்த வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது கருத்தை பாமக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரித்ததுடன் எங்களைப் பற்றியும் அவதூறாகப் பேசிய வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் என்று மணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications