அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிக்கும், நாட்டுக்கும் தங்களை அர்ப்பணித்து சரித்திரத்தில் இடம்பெற்றவர்களின் நினைவைப் போற்றுவது ஓர் அரசின் அடிப்படை கடமைகளில் ஒன்றாகும். தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்த போதெல்லாம் இந்தப் பண்பாடு போற்றிப் பேணப்பட்டதை அனைவரும் அறிவர்.
எம்.ஜி.ஆருடைய ஆட்சிக் காலத்தில் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அதன் தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்பு அவர் மறைந்துவிட்டார். அதன் பின்னர் ஜானகி அம்மையார் ஆட்சியிலும், ஆளுநர் ஆட்சியிலும் தரமணியில் சிறிய வாடகை வீட்டில் அப் பல்கலைக்கழகம் அனாதையாக இயங்கி வந்தது.
31-7-1998ல் திமுக ஆட்சியில்தான் அந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டினேன்.
சென்னை கடற்கரைச் சாலைக்கு காமராஜர் சாலை என பெயர் சூட்டியது, காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட அரசாணை பிறப்பித்தது, பெரியார் நினைவு சமத்துவபுரம், முன்னாள் முதல்வர் ஓமந்தூரார் அரசினர் தோட்டம், நாமக்கல் கவிஞர் மாளிகை, வள்ளுவர் கோட்டம், குமரிமுனையில் 133 அடி வள்ளுவர் சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, வீரன் சுந்தரலிங்கம் ஆகியோருக்கு நினைவிடங்கள், சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபம், குமரியில் காமராஜர் மணி மண்டபம், மூதறிஞர் ராஜாஜி நினைவிடம், திருமங்கலத்தில் தியாகி விஸ்வநாததாஸ் நினைவில்லம், நாகர்கோவிலில் ஜீவா மணி மண்டபம்,
பட்டுக்கோட்டையில் கல்யாணசுந்தரம் மணிமண்டபம், ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலை, சென்னையில் பக்தவத்சலம் நினைவில்லம், இடையன்குடியில் கால்டுவெல் நினைவகம், பசும்பொன் தேவர் பெயரில் கல்லூரிகள், சிலை, குன்றக்குடி அடிகளாருக்கு நினைவு மண்டபம், திருப்பத்தூரில் மருது பாணடியர் நினைவிடம், தில்லையாடி வள்ளியம்மை நினைவில்லம், எட்டையபுரத்தில் பாரதியார் மணிமண்டபம் என திமுக ஆட்சியில் தலைவர்களின் நினைவுகள் போற்றப்பட்டன.
அண்ணாவின் பெயரால் எத்தனையோ நினைவுச் சின்னங்களை அமைத்தேன். 1990ம் ஆண்டு மீனம்பாக்கம் பன்னாட்டு விமானத் தளத்துக்கு அண்ணா பெயரைச் சூட்டச் செய்தேன். அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ரூ. 172 கோடியில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சென்னையில் அமைத்தேன்.
அகிலம் புகழும் அறிவுப் பண்ணையாக ஆசியாவிலேயே முதன்மையானதாக அந்த நூலகம் அமைந்தது. திராவிட மக்களின் அறிவு வளர்கூடமாக அந்த நூலகம் விளங்குகிறது.
ஆனால் இந்த நூலகத்தை காழ்புணர்வு காரணமாக மருத்துவமனையாக மாற்றுவேன் என்று ஜெயலலிதா அறிவித்திருப்பதன் மூலம், எந்த அளவுக்கு குரோதம் குடிகொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
புதிய தலைமைச் செயலகக் கட்டடம், பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை முடக்கம், மற்ற பகுதிகளில் தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்கள் ரத்து, சென்னை புறநகர் காவல் ஆணையரகம் ரத்து, செம்மொழிப் பூங்காவின் பெயர்ப் பலகை மறைப்பு என பலவற்றிற்கு மூடு விழா நடத்தி தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களை ஒவ்வொன்றாக அழித்து வருகிறார் ஜெயலலிதா.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் அண்ணா. அண்ணாவின் இதயம் இதையும் தாங்குமோ? என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications