வெடிகுண்டு வைத்தவர்கள் கைது: ஜெவுக்கு ராம கோபாலன் பாராட்டு
சென்னை: பாஜக மூத்த தலைவர் அத்வானி செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைத்தவர்களை விரைந்து கைது செய்த காவல் துறையினரையும், அதற்கு காரணாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவையும் இந்து முன்னணி பாராட்டுகிறது என்று அக்கட்சியின் நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முன்னாள் துணை பிரதமர் அத்வானி ரதயாத்திரையை சீர்குலைக்க வைத்த பைப் வெடிகுண்டை கண்டுபிடித்ததுடன், அதனை வைத்த சதிகாரர்கள் இருவரை உடனே கண்டுபிடித்துக் கைது செய்துள்ள தமிழக காவல் துறையையும், தமிழக முதல்வரையும் பாராட்டுகிறோம். இந்த நாசக்கார செயலைத் தடுக்க உதவிய கிராம மக்களையும், விரைவாக செயல்பட்ட காவல் துறையினரையும் பாராட்டிய முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி இந்த வழக்கை விசாரித்து முடிக்க காவல்துறையை முடுக்கிவிட்டுள்ளார். முதல்வருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றிகள், பாராட்டுதல்கள், வாழ்த்துக்களை இந்து முன்னணி தெரிவித்துக் கொள்கிறது.
இந்த சதிச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க காவல்துறையும், தமிழக அரசும் முழு கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.