தர்மபுரியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது
தர்மபுரி: தர்மபுரியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கோல்கட்டாவை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோல்கட்டாவை அடுத்த டோலா பக்ரபாத் சப்தல்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரசந்த ஜித் சிங்(24). தர்மபுரியில் நடக்கும் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்கான கூலித் தொழிலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையி்ல் இவரது நண்பர்கள் திலிப்மண்டல்(28), லிலு சாண்டி சிங்(27), ராஜி சிங்(27) ஆகியோருடன் சேர்ந்து நேற்று தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கி உள்ளனர்.
பொருட்களுக்கு ரூ.1000 கள்ள நோட்டுக்களை கொடுத்துள்ளனர். கள்ளநோட்டை கண்டறிந்த கடைக்காரர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
இதில் 4 பேரும் சேர்ந்து தர்மபுரியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களின் சூட்கேசில் மறைத்து வைத்திருந்த ரூ.1,93,500 மதிப்புள்ள ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து டிஎஸ்பி சந்தான பாண்டியன் கூறுகையில், "கடந்த 1 ஆண்டுக்கு முன் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூலித் தொழிலாளியாக வந்தவர் பிரசந்த் ஜித் சிங். அப்போது தர்மபுரியில் உள்ள பகுதிகளை நன்கு அறிந்து கொண்டார். பின்னர் கோல்கட்டாவை சேர்ந்த தனது நண்பர்கள் 3 பேரை தர்மபுரிக்கு அழைத்து, அவர்களுடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன் அதியமான்கோட்டை மற்றும் தொப்பூர் போலீஸ் நிலைய எல்லைகளை சேர்ந்த பகுதிகளில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்டதாக சிலரை கைது செய்துள்ளனர். எனவே இப்பகுதியில் உள்ள வியாபாரிகள் ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்", என்றார்.
போலீஸ் விசாரணையில், கைது செய்யப்பட்ட 4 பேரும், மேற்கு வங்க மாநிலத்தில் பக்ரபாத் சப்தல்பூர் கடற்கரையில் வந்திறங்கிய வங்காள தேச கும்பலிடம் இருந்து கள்ள நோட்டுகளை பெற்றது தெரிந்தது. பின்னர் கோல்கட்டாவில் இருந்து ரயில் மூலம் தர்மபுரிக்கு கொண்டு வந்து அங்கு புழக்கத்தில் விட்டுள்ளனர்.
3 கள்ளநோட்டுகளுக்கு 1 உண்மையான நோட்டு என ஒப்பந்தம் மூலம் பணபரிமாற்றம் நடத்தி வந்ததாக 4 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications