மனைவி மீது சந்தேகம்: துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவனுக்கு வலைவீச்சு
ஆலந்தூர்: சென்னையில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தார் கணவன். பிணத்தை பாலித்தீன் கவரில் கட்டி பொது கிணற்றில் ஏறிந்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
சென்னை மணப்பாக்கத்தை அடுத்த பெரிய காலனியை சேர்ந்தவர் சேதுராமன்(40). மணல் விற்பனை ஏஜென்டாக உள்ளார். இவரது மனைவி ஜெயா(35). இவர்களுக்கு லோகேஸ்வரி(15), இலக்கியா(13) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்த ஜெயாவுக்கு, பலருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் சேதுராமனுக்கும் ஜெயாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அன்று 2 பேருக்கும் இடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டது. அதன்பின் ஜெயாவை காணவில்லை.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேட்டதற்கு, ஜெயா ஊருக்கு சென்றிருப்பதாக கூறி சேதுராமன் மழுப்பியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் உள்ள பொது கிணற்றில் சேதுராமன் அடிக்கடி மண்ணெண்ணெய் மற்றும் பெனாயில் ஊற்றி உள்ளார். இதுகுறித்து அப்பகுதியினர் கேட்ட போது, கிணற்றில் இருந்து துர்நாற்றம் வராமல இருக்கவே பெனாயில் ஊற்றியதாக கூறி உள்ளார்.
அவரது நடவடிக்கைகள் மற்றும் கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம் ஆகியவற்றால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பரங்கிமலை துணை கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கமிஷனர்கள் முருகேசன், விஜயகுமார், நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பொதுமக்கள் உதவியுடன் துர்நாற்றம் வீசிய கிணற்றை திறந்து பார்த்தனர். அதில் 4 பைகள் கற்கள் கட்டிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பைகளை திறந்து பார்த்த போது, ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்தது.
விசாரணையில் இவை ஜெயாவின் உடல் பாகங்கள் என்று தெரிய வந்தது. இதனையடுத்து சேதுராமனை தேடி அவரது வீட்டுக்கு சென்ற போது, வீடு பூட்டி கிடந்தது. பள்ளியில் இருந்த அவரது மகள்களிடம் விசாரித்த போது, அவர் ஊருக்கு செல்வதாக கூறி சென்றதாக கூறினர்.
கடந்த 27ம் தேதி கொலை செய்யப்பட்ட ஜெயா துண்டு துண்டாக வெட்டப்பட்டு, 5 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் வீசப்பட்டுள்ளார். போலீசார் தன் தேடுவதை அறிந்த சேதுராமன் தலைமறைவாகிவிட்டார்.
கொலை செய்யப்பட்ட ஜெயாவின் தலை இன்னும் கிடைக்கவில்லை. கிணற்றின் அடியில் எங்காவது சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவாகி உள்ள சேதுராமன் கைது செய்யப்பட்டால் இது குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.