சொத்துக் குவிப்பு வழக்கு- பெங்களூரு கோர்ட்டில் நாளை ஆஜராக வேண்டும் ஜெ.-ஆஜராவாரா?

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், கடந்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகளில், ஜெயலலிதா ஆஜரானார்.அப்போது, ஜெயலலிதாவிடம், 567 கேள்விகள் கேட்கப்பட்டன.
மீதி கேள்விகள் கேட்க வேண்டியுள்ளதால், வரும் 8ம் தேதி, சிறப்பு கோர்ட்டில் மீண்டும் ஆஜராக வேண்டும் என, சிறப்பு நீதிமன்ற அநீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.
நாளை ஆஜராவாரா?
அந்த மனு, நவம்பர் 3-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, பெஞ்சில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான தாக்கூர், "வழக்கின் பெஞ்ச் நீதிபதி பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன்' என, தெரிவித்தார். ஆனால், அதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து, ஜெயலலிதா மனு மீதான விசாரணை, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், நேரில் ஆஜராவதிலிருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்க முடியாது. அப்படி விலக்கு அளித்தால், அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றனர். அத்துடன், அவருக்கு தனிச் சலுகை காட்டியதாகவும், அர்த்தமாகி விடும். தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த தாங்கள் விரும்பவில்லை.
அதேநேரத்தில், ஜெயலலிதாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதை, ஓரிரு நாட்களில் பெங்களூரு சிறப்பு கோர்ட் முடிக்கலாம்.முடிந்தால், ஜெயலலிதா ஆஜராக வேண்டிய தேதியை, நவம்பர் 8லிருந்து வேறு தேதிக்கு மாற்றலாம். புதிதாக ஒரு தேதியை நிர்ணயித்து, அந்த தேதியில் ஆஜராகும்படி, ஜெயலலிதாவுக்கு உத்தரவிடலாம்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், மீண்டும் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டதை அடுத்து நாளை கண்டிப்பாக ஜெயலலிதா ஆஜராகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் புதிதாக ஒரு தேதியை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததை அடுத்து ஜெயலலிதா சார்பில் மற்றொரு நாளில் ஆஜராக அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications