தீர்வு காணாமல் முடிந்த கூடங்குளம் பேச்சுவார்த்தை-ஆனால், திருப்தி என்கிறது நிபுணர் குழு!
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவும், மாநில அரசின் குழுவும் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. அது திருப்திகரமாக இருந்ததாக நிபுணர் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 3 மாதங்களாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பொதுமக்களின் அச்சத்தை போக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், கதிரியக்க பாதுகாப்பு, அணுகதிர் மேலாண்மை, மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவினர் இன்று நெல்லை வந்தனர்.
காலை 11.30 நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மத்திய அரசுக் குழு, மாநிலக் குழுவைச் சந்தித்து பேசியது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய குழுவைச் சேர்ந்த முத்துநாயகம் (நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணை வேந்தர்), அய்யர் (கதிர்வீச்சு பாதுகாப்பு நிபுணர்), மத்தியஸ்தா (முன்னாள் பேராசிரியர்), சுகுமாறன் (சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக உயிரி அறிவியல் துறை இயக்குனர், பேராசிரியர் பிரமோஸ் (மும்பை டாடா மருத்துவமனை இயக்குனர்), கண்ணன்(சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்), மேத்தா (மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர், பாலு (பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர்), லீ (கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்), ஸ்டீபன் அருள்தாஸ் (கனநீர் வாரிய முன்னாள் இயக்குனர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில குழுவைச் சேர்ந்த நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி, தங்கராஜ் மற்றும் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராயன், மைபா ஜேசுராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள் பிரதிநிதி அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக 50 கேள்விகளைக் கேட்டார்.
இந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. அந்த குழு கூடங்குளம் சென்று அணுமின் நிலையத்தைப் பார்வையிட்டு, போராட்டக்காரர்களை சந்தித்து பேசியது.












Click it and Unblock the Notifications