பெண்ணை கேலி செய்ததை தட்டிக்கேட்ட வி. சிறுத்தைகள் நிர்வாகி கொலை: +1 மாணவன் உள்பட 5 பேர் கைது
திருச்சி: திருச்சியில் முன்விரோதம் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வார்டு செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பள்ளி மாணவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன்(41). ஆட்டோ டிரைவரான அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வார்டு செயலாளராகவும் இருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி இரவு 12 மணிக்கு அவரை சிலர் வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், +1 மாணவர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், மாரியப்பனுக்கும் இடையே கல்லூரி மாணவி ஒருவரை கிண்டல் செய்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதில் மாரியப்பன் பொதுமக்கள் முன்னிலையில் மணிகண்டனை கழுத்தில் கயிறு கட்டி இழுத்து சென்றுள்ளார்.
இதனால் அவமானமடைந்த மணிகண்டன், மாரியப்பனை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர்களான தில்லை நகரைச் சேர்ந்த மகாராஜா(20), ரயில்வே காலனியைச் சேர்ந்த +1 மாணவரான பாலாஜி(18), கிராப்பட்டியைச் சேர்ந்த பாஸ்கர்(19), பொன்மலையைச் சேர்ந்த மணிகண்டன்(22), பெரம்பலூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன்(21), குமார் ஆகியோருடன் சேர்ந்து கொலைத்திட்டம் தீட்டினார்.
இந்த குழுவின் திட்டப்படி பாஸ்கர், பாலாஜி ஆகியோர் ஜங்ஷன் பகுதியில் ஆட்டோவில் நின்ற மாரியப்பனை சவாரிக்கு அழைத்தனர். ஆட்டோ பஞ்சப்பூர் பிரிவு சாலை அருகே சென்றபோது மணிகண்டனும், ஜெதீஸ்வரனும் பைக்கில் எதிரே வந்து ஆட்டோவை மறித்தனர்.
அதே பகுதியில் மறைந்திருந்த மற்ற 3 பேரும் சேர்ந்து, பயங்கர ஆயுதங்களால் மாரியப்பனை சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மாரியப்பன் இறந்ததை உறுதி செய்த கும்பல் உடலை அப்பகுதியில் உள்ள கழிவுநீர் குட்டையில் ஏறிந்துவிட்டு தப்பியோடிவிட்டது.
இதனையடுத்து மகாராஜா, பாலாஜி, பாஸ்கர், மணிகண்டன், குமார் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications