வழக்கறிஞரை தாக்கிய வழக்கு: 15ம் தேதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராக 5 போலீசாருக்கு உத்தரவு
கோவை: வழக்கறிஞர் அனந்தீஸ்வர் என்பவரை தாக்கிய வழக்கில் கோவை போலீசார் 5 பேர் வரும் 15ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் அனந்தீஸ்வர். சிவில் வழக்குக்காக துடியலூர் காவல் நிலையத்திற்கு சென்றபோது போலீசார் தம்மை தாக்கியதாகவும், இது குறித்து பலமுறை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோவை காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த கண்காணிப்பாளர் சம்பந்தப் பட்ட காவல்துறையினர் 5 பேரும் விடுப்பில் உள்ளதால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியவில்லை என்று பதில் கூறினார்.
இதனையடுத்து வரும் 15ம் தேதி சம்பந்தப்பட்ட 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கை ஏன் சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்றக் கூடாது என்று கேட்ட நீதிபதிகள், இது குறித்து கோவை காவல் துறை கண்காணிப்பாளர் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.