ஊட்டியில் ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகளை பெற்ற பெண்
ஊட்டி: ஊட்டியில் ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகளை கூலித் தொழிலாளியின் மனைவி பெண் பெற்றெடுத்துள்ளார். அந்த தம்பதியினருக்கு உதவுமாறு டாக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊட்டி அருகே முத்தோரை கல்லக்கொரை பகுதியைச் சேர்ந்தவர் காந்தி(42). அவரது மனைவி சங்கீதா(24). அவர்கள் இருவருமே கூலித் தொழிலாளர்கள். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சங்கீதா மீண்டும் கர்ப்பமானார். அவர் பிரசவத்திற்காக ஊட்டியிலுள்ள எஸ்.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சனிக்கிழமை இரவு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளதால் அவை எடை குறைவாக உள்ளன. எனவே, அந்த குழந்தைகள் இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து டாக்டர் மீரா மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறப்பது என்பது சுமார் 30,000 பிரசவங்களில் ஒன்றில் தான் நடைபெறும். காந்தியும், சங்கீதாவும் உறவினர்களின்றி தனியாக வசித்து வரும் கூலித் தொழிலாளிகள் என்பதால் 3 குழந்தைகளை பராமரிக்க மிகவும் சிரமப்படும் நிலையில் உள்ளனர்.
எனவே இந்த குழந்தைகளுக்கு பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும். உதவ முன் வருபவர்கள் காந்தி - சங்கீதா தம்பதியினரை 97514 35942, 91591 35904 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications