போலீஸ் நிலையத்தில் புகுந்து தொண்டர்களை விடுவித்த மம்தா!
கொல்கத்தா: கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த திரிணமூல் கட்சித் தொண்டர்கள் 2 பேரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக விடுவித்தார்.
கொல்கத்தாவில், ஜகதாத்ரி அம்மன் சிலைக் கரைப்பு ஊர்வலம் சேவக் சங்கம் என்ற அமைப்பு சார்பில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது. சித்தரஞ்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அருகே ஊர்வலம் வந்தபோது அதிக சப்தமுள்ள பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது இரு தரப்பினரைடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர், பாதுகாப்புக்குச் சென்ற 12-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தாக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் தாங்கள் முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் பாபன் பானர்ஜிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கியதாகக் கூறப்படுகிறது.
தொண்டர்கள் விடுவிப்பு
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் யாரையும் கைது செய்யவில்லை. எனினும், கலவரத்தில் ஈடுபட்டதாக 2 பேரைப் பிடித்து உள்ளூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர்கள் இருவரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் என்று கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, சிறைபிடிக்கப்பட்ட இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தொண்டர்கள் இருவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications