தூத்துக்குடியில் மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஓடையில் மூழ்கி பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீன் பிடிக்கச் சென்ற 8ம் வகுப்பு மாணவன் ஓடையில் மூழ்கி பலியானான்.
தூத்துக்குடி ஜாகீர் உசேன் நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சாகீர் உசேன். இவரது மகன் சம்சுதீன். டபிள்யூஜிசி ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று நண்பர்கள் 9 பேருடன் இவன் தருவைகுளம் செல்லும் சாலையில் உள்ள காட்டாற்று ஓடைக்கு மீன் பிடிக்கச் சென்றான்.
அங்கு நண்பர்களுடன் குளித்த சம்சுதீன் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று மாயமானான். சம்சுதீனைக் காணாமல் பதறிய நண்பர்கள் அவனைத் தேடிப் பார்த்தும் பலனில்லை. இதனால் பயந்துபோன அவர்கள் இது குறித்து சம்சுதீனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த பெற்றோர், உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடைக்கு வந்து தேடியும் சம்சுதீன் கிடைக்கவில்லை. தூத்துக்குடி தீயணைப்பு துறையினர் அங்கு வந்து சம்சுதீன் உடலை மீட்டனர். இது குறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.