வரத்து குறைவு: பூக்கள் விலை கடும் உயர்வு- கனகாம்பரம் கிலோ ரூ.800
சங்கரன்கோவில்: வரத்து குறைவால் சங்கரன்கோவிலில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.800க்கு விற்பனையானது.
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் அதிக வருவாய் தரும் தொழில் மலர் சாகுபடி தான். 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிச்சி, மல்லி, கனகாம்பரம், சம்பங்கி, கொண்டை சேவல், கேந்தி, ரோஜா போன்ற மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவ மழை பொய்ததால் மலர் சாகுபடி வெகுவாக குறைந்தது. இதனால் பூக்களின் வரத்து குறைந்து விலையும் அதிகரித்தது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக சங்கரன்கோவில் பகுதியில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் குளம் மற்றும் கால்வாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அவை நிரம்பும் தருவாயில் உள்ளன. இதைத் தொடர்ந்து உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தொடர் மழையால் பூக்களின் விலைச்சல் குறைந்துள்ளதால் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.800க்கு விற்பனையானது.