நொய்யல் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவனின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு
திருப்பூர்: நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 நாட்களுக்கு முன் அடித்து செல்லப்பட்ட சிறுவனின் உடல் நேற்று மீட்கப்பட்டது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியான மேலும் 2 பேரின் உடல்களை தேடும் பணி நடந்து வருகின்றது.
தொடர் மழை காரணமாக கடந்த 6ம் தேதி திருப்பூர் நகரம் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் மற்றும் அதன் கிளைகளான ஜம்மானை, சங்கிலிப்பள்ளம் ஆகிய ஓடைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளம் காரணமாக ஆற்றங்கரைகளில் இருந்த 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த சம்பவத்தில் 14 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகினர்.
திருப்பூர் பூலவாரிசுகுமார் நகரைச் சேர்ந்த பனியன் கட்டிங் மாஸ்டர் அபுதாகீர்(35), அவரது மனைவி தில்சாத் பேகம்(31), மகள் நிலாமா(11) மகன் அப்துல்லா(10), மகள் சகினா(6) ஆகியோர் குடும்பத்தோடு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு பலியாகினர்.
ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் அபுதாகீர், அப்துல்லா, சங்கிலிப்பள்ளத்தைச் சேர்ந்த சண்முகம்(45) ஆகிய 3 பேரை தவிர மற்றவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த 3 பேரின் உடலை மீ்ட்கும் பணியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலையில் மணியக்காரம்பாளையத்தை அடுத்த நொய்யல் ஆற்றின் கரையில் சிறுவன் உடல் ஒன்று மீட்கப்பட்டது. விசாரணையி்ல் அந்த உடல் அபுதாகீரின் மகன் அப்துல்லா என்பது தெரிய வந்தது. உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அபுதாகீர், சண்முகம் ஆகிய 2 பேரின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications